FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, February 3, 2017

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...
நிறுவனர்:- நீங்க எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்த்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? 

விண்ணப்பதாரர்:- "தெரியும்... அலுவலக மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்து, தற்போது அதற்கான நேர்காணல் தேர்விற்கு வந்திருக்கிறேன்" ...

நிறுவனர்:- உங்களது தலைமையின் கீழ் உள்ள ஒருவர், நீங்கள் கூறும் எந்த வேலையும் செய்யமாட்டேன்,  என்று 'அடம்' பிடிக்கிறார் என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? 

விண்ணப்பதாரர்:- அவரை நேரில் அழைத்து, அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு, அதை நிவர்த்திசெய்து, அவரை சிறப்பாக செயல்படுமாறு வழிநடத்துவேன். 

நிறுவனர்:- அதன்பிறகும் அவர் உங்களது பேச்சை கேட்கவில்லை என்றால், என்ன செய்வீர்கள்?


விண்ணப்பதாரர்:- அவரை கண்டித்து வேலையை செய்ய நிர்பந்திப்பேன்.

நிறுவனர்:- அதன்பிறகும், அவர் உங்களது கட்டளையை மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

விண்ணப்பதாரர்:- எனது கட்டளையை மதிக்காத அவரை வேலையிலிருந்து நீக்குவதற்காக உங்களிடம் முறையிடுவேன்...

நிறுவனர்:- என்னிடம் முறையிடுவதற்கு உங்களை நான் எதற்க்காக மேலாளராக தேர்வுசெய்யவேண்டும் ... ஆகவே நீங்கள் வேறு வேலைக்கு முயற்சிசெய்யுங்கள்... நீங்கள் போகலாம்....
xxxxxxxxxxxxxx-------xxxxxxxxxxxxxxxxxx-----xxxxxxxxxxxxxxxxx

ஆகவே அதிகாரியின் கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?... என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?

நீங்கள் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்றால் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது கட்டளைக்கு அடிபணிந்து உங்களுடன் பணியாற்றும் உங்களது குழுவிலிருப்பவர்கள் அனைவரும்  உங்களோடு சேர்ந்த ஒரு அங்கத்தினர் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். 

அப்படி உங்களது குழுவின் அங்கத்தினராக இருக்கும் எவரையும், உங்களது ஆணையை மதிக்கவில்லை என்று வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்றால், அது உங்களுக்குத்தான் பெரிய இழப்பு. ஆகவே, முதலில் நீங்கள்தான் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்படவேண்டியவர்,  காரணம் நீங்கள் நிர்வாக அதிகாரியாக இருக்கத் தகுதியற்றவராகிறீர்கள்.  

உதாரணமாக ... உங்களது அங்கத்தின் கைவிரல்,  உங்களது பேச்சைக் கேட்க்காமல் எரியும் விளக்கில் கைவிரலை வைத்தால் அது விரலுக்கு ஏற்படும் கேடு அல்ல,  விரல் பேச்சைக்கேட்காமல் போனதற்குத் உங்களது தலை தான் காரணம், அதாவது தலைமை வகிக்கும் மூளைதான் காரணம். அந்த மூளைக்கு அனுபவமோ அறிவோ இல்லை என்பதாகப் பொருள். 

ஆகவே உங்களது ஆணைக்கு அடிபணியாதவரை வேலையிலிருந்து நீக்குவது என்பது,  உங்களது விரலை / கையை நீங்களே வெட்டிக்கொள்வதற்குச் சமம். 

அப்படியென்றால் ஆணைக்கு அடிபணியாதவரை எப்படித்தான் திருத்தி வழிக்கு கொண்டுவருவது என்றால் அதற்குப் பலவழிகள் உள்ளது....

வருகை தாருங்கள்.. எளிமையான, அருமையான, அனுபவப்பூர்வமான வழியில், திறமையாக செயல்படுவது எப்படி என்பதை எனது வலைப்பூவிற்குள் வலம்வந்து, எனது பதிவுகளை படித்துப் பயன்பெறுங்கள்.  
உங்களது அன்பான வருகைக்கு "http://gopalkrishnaniyer.blogspot.in" என்கின்ற இணையப்பக்கத்தின் முகவரியை சொடுக்கினால், எனது வலைதளத்தின் வரவேற்பறைக்கதவு திறக்கும்.   
....அப்போது நான் ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டா-திருப்பதி விமான தளம் அமைக்கும் திட்டப்பணியில் இருந்த நேரம்... என்னுடைய திட்டப் பணிக்குழுவில் ஒரு இளம் பொறியியல் பட்டதாரி மிகவும் மிடுக்கான தோற்றத்துடன்,  கலெக்டெர் ஒருவரது சிறப்பு சிபாரிசின் பெயரில் புதிதாக வேளையில் சேர்ந்தார்.

வேளையில் சேர்ந்த அன்றே அவர் தனக்கு இப்படிப்பட்ட வேலைகள் மட்டுமே செய்யப்பிடிக்கும் என்று பட்டியலிட்டு தந்தபோதுதான்... புரிந்தது  "இவரைப் பற்றி நன்கு தெரிந்துதான் எனது தலைமையின் திட்டப்பனிக் குழுவில் சேர்த்திருக்கிறார்கள் என்று" 

முதல் இரண்டு நாட்கள் .. திட்டப்பணிமனையை சுற்றிப்பார்த்து உங்களுக்கு என்ன புரிந்தது, அல்லது புரியவில்லை என்பதைக் கூறுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டேன். சுற்றுவட்டார மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசினார், அதிலும் அவருக்கான பிடிவாதம் தெரிந்தது..... (நான் பல இடங்களுக்கு  சென்று பணியாற்றியதால் எனக்கு 7 மொழிகள் பேசுவது என்பது கட்டாயமாக எனது மண்டையில் புகுத்தப்பட்டிருந்தது..... இருந்தும் சங்கீத ராகங்களில் எனக்கிருந்த ஈடுபாட்டால் தியாகராய கீர்த்தனைகளை அர்த்தம் புரிந்து ரசித்திட மூன்றேமாதங்களில்  நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்ட தெலுங்குமொழி, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பெயர்ப்பலகையை படிக்கவும் மேலும் பல இடங்களில் தெலுங்கு மொழி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.)      

மூன்றாம்நாள் என்னிடம் வந்த அவர்,  எந்த அளவுகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளாமல்,  வெறும் வாய் வார்த்தையால் அளந்துக்கொண்டிருந்தார்.  ஒரு சிறு வேலையைத் தந்து அதை செய்யுமாறு  கூறி அனுப்பிவைத்தேன் ... அது தனக்கு பிடிக்கவில்லை "அதை செய்யமுடியாது" என்று கூறி போன வேகத்தில் திரும்பிவந்துவிட்டார்.  திட்டக் குழுவினர்களோடு இணையாமல் தனித்தே இருந்ததால் எந்த வேலையையும் அவரால் செய்யமுடியவில்லை.... அதோடு எதற்க்காக செய்யவேண்டும் என்கிற இறுமாப்போடு இருந்தார். 

திட்டப்பணியிடத்தில் பொருட்களைவைக்கும் ஒரு "குடோன்" பட்டறை ஒன்று இருந்தது அதில் எனது கட்டளைக்கு அடிபணியாத அந்த இளம் பொறியாளருக்கு ஒரு மேஜை நாற்காலி போட்டு அங்கு அவருக்கு எந்த வேளையும் தராமல் வெட்டியாக  உட்காரவைத்துவிட்டேன். 

ஒரு 10 நாட்களாக கூட அவரால் வெட்டியாக உட்கார்ந்து பொழுதை போக்கமுடியவில்லை. அதற்க்கு அடுத்தநாள் என்னிடம் வந்த அவர்... மன்னிப்பு கேட்டதோடு, எந்த வேலையாக இருந்தாலும் செய்யத்தயார்...!!! என்று வழிக்கு வந்தார்... அன்று அந்த பொறியியல் பட்டதாரி செய்யத் தொடங்கிய முதல் வேலை "எடுபுடி-சிமெண்ட் கலவையை தூக்கும் சித்தாளு வேலை"...

அதை அவர் கஷ்டப்பட்டு செய்யவில்லை, இஷ்டப்பட்டுதான் செய்தார்.. என்பது பிறகு ஒரு நேரத்தில் அதேநபர் புதுதில்லி T3 விமானநிலைய திட்டப்பணியில்.... நான் விப்ரோவின் சார்பில் பணியிலிருந்தபோது, அவர்  ஜி எம் ஆர்(GMR) நிறுவனத்தில் அதிகாரியாக என்னை சந்தித்தபோது... மெழுகாக மனம் உருகிவிட்டார்..... இன்றளவும் எனது தொடர்பிலிருக்கிறார்...   

ஆக...திருவள்ளுவரின் கூற்றான  "அவர் நான நன்னயம் செய்துவிடில்.."  நன்றாக வேலைசெய்தது. 

என் கட்டளைக்கு அடிபணியாதவர்களிடம் " ஒழுங்காக நான் சொல்வதைக்கேட்டு வேலை செய், இல்லையென்றால் வேலையை விட்டு போய்விடு" என்று கோபமாக சண்டை போட்டிருக்க முடியும். சிலர் நம்மை கோபமூட்டி கொதிப்படையச்செய்ய முயற்சிப்பார்கள், அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை சரியாக எதிர்கொள்ளாதவர்கள் தோல்வியடைகிறார்கள். அவர்களது கோபமான சண்டையால் பெயரையும் மதிப்பையும் இழக்கநேரிடுகிறது.  உதாரணமாக கோபமான ஒரு நாய் நமது எதிரே வந்து குறைக்கிறது என்றால், நாமும் அதற்க்கு எதிராக நாயைப்போல் குறைக்கும்போது, நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருவரும் ஒன்று என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.   ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அமைதியாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் என்பது, சிறந்த அனுபவமாக கருதப்படுகிறது.  

இது ஒரு சிறு உதாரணம்தான், இதைப்போல் பல் நேரங்களில் பல அனுபவங்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்திருக்கிறது... பலநேரங்களில் முரடர்கள் கூட பொட்டிப்பாம்பாக என் கட்டளைக்கு  அடங்கி அடிபணிந்து வேலைசெய்திருக்கிறார்கள். ... அவை அனைத்துமே "ஆடற மாட்டை ஆடி கறக்கணும், பாடற மாட்டை பாடிதான் கறக்கணும்" என்கிற நமது முன்னோர்களின் கூற்றைத்தான் நாம் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்வதில், நமது திறமையை நாம் உணரமுடியும். 

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 
எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வானொலி நிகழ்ச்சிக்காக நான் எழுதி வழங்கியதை புத்தகமாக "கோகிலாவின் 108 நேர்காணல் அனுபவங்கள்" 

அன்பு நேயர்களே நண்பர்களே, இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? வாருங்கள் நிகழ்ச்சிக்கு செல்வோம்... 

பாடல்:- போடச்சொன்னா ...... போட்டுக்கறேன் ...... போதும்வரை ......... கன்னத்திலே..பாடலின் திரைப்படம்:- பூவா தலையா (1969) பாடலை இயற்றியவர் கண்ணதாசன், பாடலை பாடியவர் TMS, இசை MSV.

வாய்ப்பிற்கு நன்றி 
மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு  கோகி-ரேடியோ மார்கோனி. 


Thursday, January 26, 2017

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது... ....

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...  

ஒரு நாள் குருகுலத்தில் "ஜென்" குருக்களில் முதன்மையானவர் என்று கூறப்படுகிறது "கன்பூசியஸ்" என்ற குருவானவர், தன்னுடைய மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து சில அறிவுரைகளைக் கேட்டான்.

‘"ஒருவரது ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், எது எது தேவை?’.

‘ஆட்சி சிறப்பாக அமைய மூன்று விஷயங்கள் முக்கியம். 
முதல் தேவை.. போதிய உணவு இருப்பு. 
இரண்டாவது மக்களின் பாதுகாப்புக்கு பலமான ராணுவம். மூன்றாவது, மக்களின் நம்பிக்கையை அரசு பெற்றிருக்க வேண்டும். 

இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றிருப்பதே சிறப்பான அரசு  நிர்வாகம்’ என்றார் குரு.

மாணாக்களிடமிருந்து மீண்டும் கேள்வி.. ‘இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால், முதலில் விட வேண்டியது எது?’

குரு :- ‘ராணுவம்’

மாணவர் :- ‘இரண்டாவதாக ஒன்றை விட வேண்டும் என்றால்..?’

குரு :- ‘உணவு இருப்பு’

மாணவர்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.!!! சாப்பிடாமல் எப்படி????.... அவர்களின் ஆச்சரியத்தைக் கண்ட குரு,  அதற்கான விளக்கத்தை அளிக்க முன்வந்தார்.

‘மாணவர்களே! உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிய நேரிடும். மனித சமுதாயத்திற்கு இதுபோன்ற நிலை பலமுறை வந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் மனித சமுதாயம் அதில் இருந்து மீண்டிருக்கிறது. ஆனால் ஒரு அரசின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், அந்த நாட்டின் நிலை அதோகதியாகிவிடும்’ என்றார் கன்பூசியஸ்- குரு.

மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். 

குருவின் அறிவுரை மாணவர்களின் மண்டைக்குள் புகுந்துவிட்டது..., 
ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...   ஓட்டுப்போட்ட  உங்களுக்குத் புரிந்ததா? 

"வால் மட்டும்... இன்னும் உள்ளே நுழையவில்லை"

..... கோகி-ரேடியோ-மார்கோனி..... 

Friday, January 20, 2017

வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா????

"வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா????

வாசகர் வட்டம் நிகழ்ச்சியில்  "நீங்களும் கதை எழுதலாம்" என்கிற தலைப்பில்.பேசிக்கொண்டிருந்தேன் ."தினமும் தூங்கப் போகும்போது ஒரு சிறு நோட்டுப்புத்தகத்தையும் அதோடு ஒரு பென்சில் ஒன்றையும் தயாராக உங்களின் படுக்கையின் தலையணைப்பகுதியில் வைத்துவிடுங்கள்... சரியாக விடியற்காலையில் உங்களது ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகளை, காலையில் எழுந்தவுடனே குறிப்பெடுத்து வைத்துவிடுங்கள். (குறிப்பெடுக்காவிட்டால் நீங்கள் கண்ட கனவு மறந்துபோகும்) அதன் பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நீங்கள் எழுதிவைத்த குறிப்புக்களை ஒன்று கோர்த்து ஒரு கதையாக எழுதலாம் ... கதை எழுதுவதற்கு இதுவும் ஒரு எளியமுறை, இதைப்போலவே பிரபல எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களும் மற்றும் பல சிறந்த கதாசிரியர்களும் இப்படித்தான் தமது கனவுகளில் வந்த பல விவரங்களைக் கொண்டு சிறந்த படைப்புக்களைத் தந்திருக்கிறார்கள்... என தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ....  

"எனக்கும் கதை எழுதணும் ஆசையா இருக்கு!!! நான் ஒரு கதை  புத்தகம் எழுதணும்னா, அந்தப் புத்தகம் எத்தனை பக்கங்கள் கொண்டதாக இருக்கணும்.????." என்று கேட்ட அந்த இளம் வயது சிறுமியைப் பார்த்தபோது முதலில் சிரிப்புதான் வந்தது... இந்த அளவிலாவது தைரியமாக எழுதணும்... என்று தனது ஆசையை வெளிப்படுத்தியதே, ஒரு தொடக்கத்தின் பெரிய வெற்றிதான்...  அன்றய நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட அவரையே சிறந்த விமர்சகராக முன்னிறுத்தி .. "நீங்களும் கதை எழுதுவது எப்படி" என்று விரிவாக விலக்கிக் கூறினேன் ...

ஒரு கோவிலில் பூசாரி ஒருவரை தேடி வந்த  பக்தனிடம்,  பரிகார பூசை பற்றி கூறிக்கொண்டிருந்தபோது... பக்தன் கேட்டான் ..."சாமி எத்தனை பழம் வைத்து நெய்வேத்தியம் செய்யவேண்டும் என்று..."  

எத்தனை முறை பூசை செய்தால் எனக்கு நல்லது கிடைக்கும்..என்று கேட்காமல் ... பிரசாதம் தின்பதிலேயே குறியாக இருந்த அவனின் மனநிலையை புரிந்துகொண்ட அந்த பூசாரி சிரித்துக்கொண்டார்.....

அதுபோலத்தான் கதை எழுத எத்தனைப் பக்கங்கள் எழுதவேண்டும் என்று கேட்பது.........  இருந்தாலும் இன்றுவரை சாதனையாக ஒரு பழைய புத்தகம், அதுவும் 1970கலீல் வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா???? 

அப்படிப்பட்ட சாதனைப் புத்தகம்தான் "பழைய தமிழ் திரைப்பட பாடல் புத்தகம்"  
ஒரு காலத்துல நான்  பள்ளி கூடத்துல படிக்கும் போது, பள்ளி ஆண்டு விழாக்களில் பாட்டுப் போட்டியில், பாட்டு பாடணும்னா, அதுக்கு இருந்த ஒரே வரப்ரசாத புத்தகம்தான்  "திரைப்பட பாட்டு புத்தகம்தான்". என்னதான் மனப்பாடம் செய்திருந்தாலும், மேடையிலிருந்து கூட்டத்தைப் பார்த்த பதட்டத்தில் அது முடியாதுபோக, கையேடு எடுத்துச் சென்ற பாட்டுப்புத்தகத்தைப் பார்த்து பாடிவிட்டு வந்தது இன்னமும் எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது  

அப்போதெல்லாம் அந்தப் புத்தகத்தின் விலை வெறும் 20 பைசாவுக்கு கடைகளில் கிடைக்கும். சில சாலையோரம் இருக்கும் நடைபாதைக்கடையில் வெறும் 10 பைசாவிற்குக்கூட கிடைக்கும். வெறும் நான்கே பக்கம் கொண்ட அந்த புத்தகத்தில் திரைப்படப் பாடல்களோடு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனமும் விளம்பரமும் இருக்கும்.  

தற்போது கணினியில், இணையம்/வலைத்தளம் என்று வந்துவிட்டதால், இந்தப்புத்தகங்களுக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.  இருந்தும் இன்றும் எங்காவது ஒரு மூலையில் பழைய புத்தகக் கடையில் அல்லது பழைய கால வீட்டின், அலமாரி அல்லது பரண்களின்  மேல் வைத்திருக்கும் பழைய தகர பெட்டிக்குள் அடைபட்டுக்கிடக்கலாம். 

பலலட்சம் பிரதிகளை விற்ற, வெறும் 4-பக்கங்களையுடைய, அந்தக்காலப் பழைய திரைப்படப்  பாடல்களைக் கொண்ட புத்தகங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம். 




அன்றய "நீங்களும் கதை எழுதலாம்"  நிகழ்ச்சி எங்கோ ஆரம்பித்து வேறெங்கோ சென்று முடிந்தது போல இருந்தது ....

என் மனம் இந்தப்பாடலை முணுமுணுத்தது ....
("எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்...
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது" ...)

நன்றிகளுடன்  கோகி-ரேடியோ மார்கோனி. 

Friday, January 13, 2017

"மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ...


ஞாபகம் வருதே! ...:- நான் பள்ளியில் படிக்கும்போது எனது ஆங்கில ஆசிரியர் கேள்வி கேட்டு விடை தெரியாமல் எழுந்துநிற்கும் மாணவர்களுக்கு "மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ... அதோடு கேள்விக்கு விடைதெரியாமல் "நிற்க அதற்குத் தக" என்று தமிழ்த் திருக்குறளை எடுத்துக்காட்டாக வைத்து ஆங்கில ஆசிரியர் இலைமறைக்காயாகத் திட்டுவார்... அப்போது தெரியவில்லை... இப்போது அதை நினைத்து ரசிக்கமுடிகிறது.  நன்றி கோகி-LAW.

Tuesday, January 3, 2017

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) 5.4 நாமதான் முதல் இடமா????



2016ம் வருட முடிவில்,  உலக நாடுகளின் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில்  (Gross Domestic Product)   5.4%.... நாமதான் முதல் இடமா? ...  

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு ... 

இது சரியா?  நம்ம பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பது வரும் பிப்ரவரி மாத பட்ஜெட் வரவுசெலவு கணக்கிற்குப் பிறகு தெரியுமா???


UNESCO-யுனஸ்கோ நிறுவனத்தின் தகவலின்படி உலகளவில் மொத்தம் 44,000+ பதிவுசெய்யப்பட்ட  FM/AM பண்பலை அலைவரிசை மற்றும் இணையவழி & சமுதாய வானொலிநிலையங்கள் இருப்பதாகவும், இதில் FM/AM பண்பலை அலைவரிசையில் 85% சதவீதத்தினர் 25வயதிலிருந்து 54 வயதுடைய ரசிகர்கள் வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரத்தை தந்திருக்கிறார்கள். உலகளவில் விவசாயிகள்தான் அதிகம் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இந்தியாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குறைந்த அலைவரிசை கொண்ட கல்லூரி வானொலி நிலையங்கள் செயல்படுவதாகவும் புள்ளிவிவரம் தந்திருக்கிறார்கள்.        

2016 ம் வருடத்தில் உலகத்திலேயே மிக அதிக ரசிகர்களைக்கொண்ட வானொலியாக "சுவீடன் நாட்டின் - வெர்ஜிஸ் பி-2" என்கிற வானொலி முதலிடம் பிடிக்கிறது.  தொடர்ந்து இந்தவருடமும் லண்டன் BBC-Radio வானொலி நிலையம் உலகளவில்  9ம் இடத்தில் உள்ளது.  இதே பி பி சி லண்டன் தமிழோசை வானொலி, உலகிலேயே மிக அதிக தமிழ் ரசிகர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்க்கு அடுத்த இடத்தில் தமிழகத்தின் ரெயின்போ-(வானவில்) பண்பலை வானொலி மிக அதிக தமிழ் ரசிகர்களைக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2016 ம் வருடத்தில் இந்தியாவில் மிக அதிகமானவர்கள் கேட்ட ஒரு வானொலி நிகழ்ச்சியாக  "இந்தியாவின்-மன்கிபாத்" என்கிற பாரதப் பிரதமரின் வானொலி நிகழ்ச்சியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

ஆதாரம் UNESCO. ORG


Thursday, December 8, 2016

இந்த வருடமும் தமிழை ஓரம்கட்டிய தேர்வாணையம்.....!!!!-"சொல்லாதே யாரும் கேட்டால்"..

"சொல்லாதே யாரும் கேட்டால்".....

உயர்கல்வியில் தமிழை ஓரம்கட்டிய மத்தியத் தேர்வாணையம்.....!!!! 
ஐ. ஏ .எஸ்  என்ற இந்திய அரசின் சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வெழுதியவர்களில், ஒரு மாநில மொழியில் தேர்வை எழுத குறைந்தபட்சம் 25 நபர்கூட தேறவில்லை என்றால், அந்த மாநிலத்தில் தாய்மொழிக் கல்வியே இல்லையோ? என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த அப்பட்டமான உண்மையை இந்தவருடமும் இந்திய மத்திய தேர்வாணையம் அம்பலப்படுத்தியிருக்கிறது. 

தற்போது திசம்பர் 3ம்-திகதி முதல் நடந்துகொண்டிருக்கும் ஐ. ஏ .எஸ்  என்ற இந்திய அரசின் சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வில்,  தமிழ்நாட்டில் பட்டப்படிப்புவரை தமிழ் மொழியில் படித்து,  தமிழில் ஐ. ஏ .எஸ் இறுதித் தேர்வை எழுத குறைந்தது 25 நபர்கள்கூட தேறவில்லை  என்கிற அவலநிலை தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாகக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பலர் ஆங்கில வழியில் இந்தத் தேர்வை எழுதி வெற்றிபெறுகிறார்கள். தமிழ்மொழியல்லாத வேறுபல மாநிலங்களில் வசிப்பவர்கள், அவர்களின் அந்தந்த மாநில மொழியில் இந்த தேர்வை எழுதி வெற்றிபெறுகிறார்கள். பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சிசெய்தவர்கள்... தமிழகத்தின், தமிழ்வழிக்கல்வியின் மேம்பாட்டுக்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.... 

"உரிமையோ உரிமை என்று ஊர் எங்கும் மேடை போட்டால் 
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன?????" 

"சொல்லாதே யாரும் கேட்டால் ... எல்லோரும் தாங்கமாட்டார்....."

Friday, October 14, 2016

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை ! வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

சந்தேகமும், பயமுமே ஒரு மனிதனின் மிகப்பெரிய பலவீனங்கள், அப்படிப்பட்ட ப..ல..வீ..ன..ங்க..ளை நெருங்கவிடாமல் காத்துக்கொள்ளும் மனிதன், நொடிப்பொழுதில் தீர்க்கமான முடிவுடன் எதையும் சமாளிக்கும் பண்பை பெறுவதோடு மிக எளிதில் சாதிக்கும் வல்லமையைப்பெறுகிறான். இதற்க்கு ஒரு உதாரணம்தான் இந்த பதிவு.

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூ...ர...மோ.... அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "குவளையில் உள்ள தண்ணீரை அந்த கையடிக் குழாய் / பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் குவளையில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்." 

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !
 நன்றி .... நட்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Thursday, October 6, 2016

ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...


பெரு மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை - தமிழம்.பண்பலை) அவர்களுக்கு, பணிவான வணக்கங்களுடன்...  

திருக்குறள் பயிற்சி பற்றிய உங்களது சேவை மிகவும் பாராட்டத்தக்கது, தமிழகம் அல்லாத பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மூன்றாம் தலைமுறையினரிடையே திருக்குறளை பயிற்றுவிக்க மிகவும் எளிய முறையை உருவாக்கி தமிழ் தாய்மொழியை தழைத்திடச் செய்த அறிய செயலை பாராட்டும் உள்ளங்கள் பல. 

மேலும்  "திருக்குறள் படித்தல் - (ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/tkl300/index.html ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...என்கிற இனைய வலைப்பக்கத்தை, புது தில்லியின் வைசாலி (தமிழ்) வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

நன்றிகளுடன்
கோபால் கிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி 
புது தில்லியிலிருந்து. 



திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை - தமிழம்.பண்பலை) :-
  
ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...

http://win.tamilnool.net/tkl300/index.html

கடந்த இரண்டு திங்களாக திருக்குறளை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்கிற ஒரு பயிற்சிக் கட்டகம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இயங்கினேன். திரு பழனிச்சாமி சேரிபாளையம் தமிழாசிரியர், திரு.கல்லை அருட்செல்வன் திரு பல்லடம் முத்துக்குமரன் திரு. அய்யாசாமி, திரு கணேசன் போன்ற நண்பர்களின் உதவியோடு, 1330 திருக்குறளையும் ஆய்வு செய்து மாணவர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய திருக்குறளை வரிசைப்படுத்தி, அதிலுள்ள கடினச் சொற்களுக்கு
உரிய பொருளை அருகில் இணைத்து, படவடிவக்கோப்புகள் உருவாக்கி, மாணவர்களுக்குக் கொடுத்து ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 300 குறள்களுக்கான இசை வடிவை வெட்டி ஒட்டி இணைத்து அதனை இணைய பக்கமாக உருவாக்கி திரு கார்த்திக் உதவியுடன் தமிழம் இணையதளத்தில் இணைத்து, மாணவர்கள் கற்க உதவுகிற கட்டகத்தை இணையத்தில் இணைத்துள்ளேன்.

http://win.tamilnool.net/tkl300/index.html

இந்தப் பயிற்சிக் கட்டகத்தைப் பயன்படுத்துவது எப்படி ?

1) பொது மக்கள் நாள் ஒரு பக்கமாக படித்து உள்வாங்கலாம். 

2) மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு பக்கங்கள் எனக் 
காட்டி அவர்களையே உரை எழுத ஊக்குவிக்கலாம். 

3) ஒரு முழுநாளை இதற்காக ஒதுக்கி விருப்பம் உடைய நண்பர்களை இணைத்து 21 பக்கங்களையும் இசைத்துக் காட்டி, பக்கங்களைக் கொடுத்து, அவர்களையே உரை கூற வைத்து, திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தலாம். 

இணையத்தில் பார்த்து இது தொடர்பாக இயங்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்ய அணியமாக உள்ளேன். 

நம் மக்களும், மழலையர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் வரலாற்றைச் சொல்லுகிற திருக்குறளைப் படித்து உணர்ந்து உள்வாங்கித் தம் வாழ்முறையைச் செப்பமுற அமைத்துக் கொள்ள வழி வகுப்போம். 

அன்புடன் 
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை - தமிழம்.பண்பலை 
மின்னஞ்சல் :- pollachinasan@gmail.com 
http://win.tamilnool.net/tkl300/index.html

Friday, September 23, 2016

அருள்வாக்கு:- ஸ்ரீ ஆதி சங்கரரும்... ஸ்ரீ முத்துச்வாமி தீட்சதரும் ....

அருள்வாக்கு:- ஸ்ரீ ஆதி சங்கரரும்... ஸ்ரீ முத்துச்வாமி தீட்சதரும் ....

"பக்த ப்ரஹாலாதா" திரைப் படத்தில் வரும் - "லக்ஷ்மி  வல்லபா" என்ற பாடலைக் கேட்க்கும் பொது....https://youtu.be/KQGocOpsn2w

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய....லக்ஷ்மி- கனகதாரா அஷ்டோத்தரத்தில்......"ஸ்ரீ சங்கர சரிததத்தின் ஐந்தாவது பகுதியியும்" நாம் பார்க்கும்போது மஹாவிஷ்ணுவுக்கே உரிய அசாதாரண நாமாவளியான "புருஷோத்தமன்" என்பதைச் சொல்லி அவருடைய  சக்தியாக மஹாலக்ஷ்மி தாயார்  இருப்பதை "புருஷோத்தம வல்லபாயை" என்று வரும் ...ஸ்ரீ  லக்ஷ்மி- கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடி முடித்ததுதான் தாமஸம்! மஹாலக்ஷ்மி தாயார்  அந்தக் குடிசையைச் சுற்றிப் பாழாயிருந்த அத்ருதி முழுக்க ஸ்வர்ணத்தாலான (தங்கத்தினாலான) நெல்லிக் கனிகளாகவே, ஒரு முகூர்த்த  காலம் மழையாக வர்ஷித்துவிட்டாள்!  அங்கு தங்க நெல்லிக்கனிகள் பளபளவென்று ஒரு பெரிய மலையைப் போன்று மழையாக கொட்டித் தீர்ந்தது..... ஸ்ரீ ஆதி சங்கரர் ஏன் அப்படி லக்ஷ்மி- கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார் என்றால்.....


ஆதிசங்கரர் சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி எனப்படும் பிட்சாவிதி தர்மத்தை கடைபிடித்துவந்தார்.  ஒருநாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று, "பவதி பிக்ஷசூந்தேஹி" என்று சொல்லவேண்டும். ஏதாவது பிட்சை போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும். வேறெதையும் கேட்கக்கூடாது. ஒருவேளை மட்டும்தான்.... அந்த ஒருவேளையிலும்கூட மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். பிட்சை போடவில்லை யென்றால் அன்று பசியுடன் இருக்கவேண்டியதுதான். அவ்வாறு வீட்டின்முன்னால் சென்று குரல் கொடுத்தார். 

அந்த வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான ஒரு நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது. அதுவும் ஒரு பக்கம் சற்று அழுகலான நெல்லிக்கனி அது..... அப்படிப்பட்ட அந்த நெல்லிக்கனியை அன்று  உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்

ஆதிசங்கரர் குரல் கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பிட்சையாகப்  போடுவது என்று தெரியாமல் திகைத்தாள். இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது. மூன்றாவது குரலுடன் போய்விடுவார். அப்படியாகினால் ஓர் இளம் சன்னியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும்.  ஆகவே அந்த ஒரு நெல்லிக்கனியை ஸ்ரீ ஆதிசங்கரருக்குப் பிட்சையாகப் போட்டுவிட்டாள். 

இதனைக் கண்ட ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம் வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார். அவர் அந்தப் பாடலைப் பூர்த்தி செய்தபோது அங்கு பொன்மழையாகக் கொட்டியது.

அவதாரக் குழந்தைக்குப் போட்ட ஒரு அழுகல் நெல்லி பழம் அனந்த கோடி மடங்கு தங்கப் பழங்களாகத் திரும்பின!

முதலில் ப்ராம்மண ஸ்த்ரீ கண்ணீர்  தாரைத் தாரையைக் கொட்டினாள். அதைப் பார்த்து ஆசார்யாளின் வாக்கிலிருந்து ஸ்தோத்ர தாரை கொட்டிற்று. அதைக் கேட்டு லக்ஷ்மி கனகதாரையைக் கொட்டி விட்டாள்.

அப்படி அவரின் தவத்திரு மனதிலிருந்து எழுந்த உணர்ச்சிப்பிழம்பாகக் கொட்டிய ஸ்தோத்ரத்துக்குக் "கனகதாரா ஸ்தோத்ரம்" என்றே பேர் ஏற்பட்டது. ' (கனகதாரா) ஸ்தவம்' என்றும் சொல்வார்கள். ஸ்தவம் என்றாலும் ஸ்தோத்ரந்தான்.

இதைப்போலவே பிரபல கர்னாடக சங்கீத மகா வித்வான் ஸ்ரீ ஸ்ரீ முத்துச்வாமி தீட்சிதர் (அவர் வாழ்ந்த காலம் -March 24, 1775 – October 21, 1835) அவர்கள் சங்கீதத்தையே தவமாய் தவமிருந்து வாழ்ந்த வித்துவான் அவர்களின் மனதிலிருந்து எழுந்த உணர்ச்சிப்பிழம்பாகக் கொட்டிய ஸ்தோத்திரமும் "ஸ்ரீ லலித்தா சஹஸ்ரநாமம் மற்றும் "ஸ்ரீ வரலக்ஷ்மி ஸ்தோத்திரம்" என்று போற்றப்படுகிறது. 

சங்கீத மகா வித்வான் ஸ்ரீ ஸ்ரீ முத்துச்வாமி தீட்சிதர்,.. இவர் திருவாரூரில் வாழ்ந்த சமயத்தில்தான் திருமகளின் திருவருளைப் பெரும் சம்பவம் அவர் வாழ்வில் நடந்தது.... அதற்குக் காரணம் அவர் மனைவியின் ஆசை. அந்த ஆசைக்கு காரணம்... அக்கம்பக்கத்து சூழல்.... பொருள் வேண்டிப் பாடுவோர் பலர் இருந்த காலம் அது. இறைவன் அருள் வேண்டி மட்டும் பாடிய பாவாணர்களில் ஒருவர் முத்துச்வாமி தீட்சிதர்.... அவரது மனைவிக்கு நகைகள் மீது ஆசை உண்டாயிற்று. தஞ்சை மன்னனைப் பார்த்து பேட்டி கொண்டால் நிறைய சன்மானமும்  பணமும் கிடைக்குமென்று யோசனையும் தெரிவித்தாள். தீட்சிதரும் தங்கமகளை போற்றிடும் பாடல் ஒன்றை 'லலிதா' ராகத்தில் பாடினார் - "ஹிரண்மயீம் லக்ஷ்மீம்". .........
அன்று இரவு கனக மகள்,.... சர்வாபரண பூஷிதையாய் தீட்சிதரின் மனைவிக்கு தரிசனம் கொடுத்தாள். ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்து, இவை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று திகட்டும் படியாக கேட்டாள்.... தீட்சிதரின் மனைவி, அந்த சந்தோஷ செய்தியை அவரின் கணவரான முத்துச்வாமி  தீக்ஷதரிடம் தெரிவித்தாள். அதோடு இனி எனக்கு ஆபரணங்கள் மீது ஆசையே இல்லை என்று கூறினாள்.!!!!! 

இதைக் கேட்டு மகிழ்ந்த தீட்சிதர், தன்னைப் பெருமை படுத்திய வரலட்சுமியை போற்றி, நன்றி கூறி, மற்றொரு துதியைப் பாடினார் - "ஸ்ரீ வரலக்ஷ்மி ஸ்தோத்திரம்" - செல்வங்களை அளிப்பவளும் அழகிய பத்ம பாதங்களையுடையவளும் ரசனைக்கு இருப்பிடமான அம்மா வரலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம்.... மகிழ்வான புன்னகையும் மங்களமான பொன் நகையும் என் இல்லத்தில் சேர்ந்திருக்க அருள்வாயாக......... 

இப்படி அவர்களது அருள் வாக்குகளை நாமும் கேட்டதினால், நம்முடைய இல்லங்களிலும்..... மகிழ்வான புன்னகையும், மங்களமான பொன் நகைகளும் நிறைந்திருக்கும் அருள் கிடைக்கட்டும்..... 

இப்படிக்கு, 
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி

Friday, September 2, 2016

‘மஹதி’என்ற அபூர்வ ராகத்தினை உருவாக்கியவர் சங்கீத வித்வான் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்தான்.

மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹணத்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.

[ஆரோகணம்: S G3 PA N2 S அவரோகண்ம்: S N2 PA G3 S] 

(# நாரதர் நாரதர்கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! 

இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் சங்கீத வித்வான் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியதோடு இந்த ராகத்தை முதன் முதலில் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராகத்தினை அறிமுகம் செய்தார். 

இந்தக் கச்சேரியில் இவர் பாடிய "மஹதி" ராகப் பாடலான " மஹனீய மதுர மூர்த்தே " என்ற பாடல் இவரின் கர்னாடக கச்சேரியில் மிகப் பிரபலமானது. 

அபூர்வமான இந்த ராகத்தில் அமைந்த ஒரே ஒரு திரைப்பாடல் 'அபூர்வ ராகங்கள்' தமிழ்த் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தற்செயலாக பாலமுரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கின்றாராம். அப்போதுதான் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்  தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார். 

அப்போது உருவானதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான "அதிசய ராகம்; ஆனந்த ராகம்; அழகிய ராகம்" என்ற பாடல். 

இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது 

(ராகமாலிகை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் ஒரு பாடலில் பல ராகங்களும் தொடர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலிகை ) 

இந்த அதிசய ராகத்தினைக் இப்போது இங்கே கேளுங்கள். https://youtu.be/1NhlRHuc6j4

Saturday, August 6, 2016

எதிலும் எப்போதும் "ஒரு படி முன்னே....!!!!"

எதிலும் எப்போதும் "ஒரு படி முன்னே....!!!!"  
வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது. மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான். 

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்….. “இன்னும் முன்னால் போ” என்பதுதான்!! (என்றும் நட்புடன்.....கோகி)

Tuesday, July 19, 2016

ஆங்கில இலக்கண வகுப்பில், தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்...

ஆங்கில இலக்கண வகுப்பில், தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்...
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களைப்பற்றி  (அவரின் வாழ்க்கை காலம் 1946 முதல், செப்டம்பர் 16, 2009வரை) இவர் என்றும் நம் மனதில் நீங்காப் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார்.


அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் அவர்கள்  சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரியான இவர் நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்....

நான் படித்த அதே பள்ளியில், 2 வருடம் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிய நாட்கள் எனக்கு என்றும் மறக்கமுடியாதவை, அப்போதெல்லாம் (1980)  கிராமப் பகுதியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், 10ம் வகுப்புக்கு செல்லாமலே படிப்பை நிறுத்திவிடுவார்கள், காரணம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது கடினம் என்கிற ஒரு எண்ணம் பரவலாக இருந்தது. 

அந்தக்கால கட்டத்தில்,  நிரந்தரம் செய்யப்படாத, தற்காலிக பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியராக  பணியாற்றிக்கொண்டிருந்த நானும், மேலும் சில அரசுப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று... தேர்தல் கூட்டத்தில் பேசுவதைப் போல மேடையில் பிரசாரம் செய்வோம்.... கிராமத்திற்கு சென்றதும் கிராம மக்களை கவருவதற்கு முதலில்  பாடல் ஒலிக்கும்:- "பாடசாலை செல்லவேண்டும் பாப்பா எழுந்திரு.." என்கிற பாடல் டி ஆர் பாப்பா அவர்கள் இசையமைத்திருந்த பாடல்... அப்போதெல்லாம் மிகவும் பிரபலமான வானொலிப் பாட்டு இது ......
பிறகு ஒவ்வொரு ஆசிரியர்களாக கிராமத்து மக்களுக்கு எளிமையாக புரியுமாறு எடுத்துக்கூறி பேசவேண்டும்... அப்போது நான் கூறியது "A, B, C, D...." கூட சரியாக சொல்லத் தெரியாதவர்களும் 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் பாஸ் மார்க் எடுக்கலாம், அதற்க்கான எளிமையான வழியில் பாடம் சொல்லிக்கொடுத்து உங்களின் மகன்/மகளின் வெற்றிக்கு உறுதியளிக்கிறோம்..... என்று,.....எதோ டுடோரியல் காலேஜ் விளம்பரம் போல, நாங்கள் பணியாற்றிய அரசுப்  பள்ளியின் 10ம் வகுப்பிற்கு ஆள் சேர்க்கவேண்டிய நிலை இருந்தது....... 

(பின் குறிப்பு:-அன்று மேடையில் பேசிய, என்னுடன் பணியாற்றிய பகுதிநேர ஆசிரியர் ஒருவர் தற்போது ஒரு முக்கிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கிறார். ஆசிரியர் பணியைவிட அரசியல்பணி எளிமனானது என்கிற முடிவுக்கு வந்ததே... அன்று நாங்கள் செய்த பிரசாரத்தின் விளைவு என்றானது......  நல்லவேளை எனது தொழில் படிப்பும், மனசும் அதற்க்கு இடம்கொடுக்கவில்லை. ஆகவே நான் பல்வேறு திட்டப் பணியில் பல ஊர், உலகம் என்று இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்).
கிராமம் கிராமமாக அலைந்து பேசியதற்கு பெற்றோர்களைவிட மாணவர்களிடம் நல்ல பலன் இருந்தது. பல மாணவ மாணவிகள் 9ம் வகுப்போடு நின்றுவிடாமல் 10ம் வகுப்பு படிப்பைத் தொடர்ந்தார்கள். அப்படி படிப்பைத் தொடர்ந்த பல மாணவர்களுக்கு A, B, C, D.. கூட சரியாக சொல்லத் தெரியாது என 90% மாணவர்கள் இருந்தது தெரிந்தபோது எனக்கு சற்று மனதுக்கு கவலை வந்தாலும்.... தொழிற்பாடப் பிரிவின், "பொது எந்திர தொழில் கல்வி" (General Machinist- Vocational Education)- பகுதிநேர ஆசிரியராக இருந்த எனக்கு, அதை ஒரு சவாலாக எடுத்து ஆங்கில ஆசிரியராக மாறிய அந்த நாட்களில்.... எனக்கு புது உற்சாகம் தந்தவர் "இன்று ஒரு தகவல்" என்கிற வானொலி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை மறக்கமுடியாது. 

அவரின் வானொலி  நிகழ்ச்சியின் பல தகவல்கள், கதைகள், சம்பவங்களை, என பலவற்றை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி மாணவர்களின் ஆங்கிலப்பாடத்தின் பயத்தை போக்கி அவர்களை ஊக்கப்படுத்தி வெற்றியடையச் செய்தோம்.... 

(பின் குறிப்பு:- A,B,C,D....யிலிருந்து ஆரம்பித்து ... ஒரு சில திரும்ப திரும்ப கேட்கும் கேள்வி பதில்களை தினமும் இரண்டு வரி என்று மனப்பாடம் செய்யவைத்து... பல மாணவர்களை ஒருவழியாக 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில்  35 to 38... என பாஸ் மார்க் எடுக்க வைத்தபொது... ஸ் ஸ் ஸ் ஸ் அப்பாடா என...... மாணவர்களைவிட, ஆசிரியராக இருந்த நாங்கள்தான் மிகவும் சந்தோஷமடைந்தோம்...)  

அந்த அனுபவத்தின் ஒரு பகுதியைத்தான் இதோ இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்...... அன்று மாணவர்களுக்கு எளிமையான ஆங்கில இலக்கணம் - இரண்டாம் விடைத்தாள் (கிராமர்) வகுப்புக்கு..... தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் சுவையான நிகழ்ச்சிகளை... சுவைபட எடுத்துக்கூறி, மாணவர்களின் மனதில் அன்றைய ஆங்கில இலக்கண பாடத்தை பசுமரத்தாணி போல ஆழமாக பதியவைத்தோம்......

அன்றைய ஆங்கில இலக்கண பாடம் :-
The lesson is Grammatical Person in nominative case English Pronouns. 
Fill in the blanks questions:-
First Person Singular= " I " Plural = "We" 
Second Person Singular & Plural = "You"
Third Person Singular= " He/She/It" Plural = "They"
வயதானவர்களில் பெரும்பாலோனோர் விரும்பும் ஒரு அமர்வு நாற்காலி என்றால் அது "ஈஸி சேர்-Easy Chair" என்று ஆங்கிலத்தில் அழைக்கும் வசதியான சாய்வு அமர்வு நாற்காலி. அதாவது "டூ இன் ஒன்" என்று ஆங்கிலத்தில் கூறுவதைப்போல இரண்டு பயன்கள் தரும் ஒரே அமர்வு சாய் நாற்காலி இது  இதில் உட்கார்ந்துகொள்வதையும் படுத்துக்கொள்வதையும் ஒரே நேரத்தில் செய்யலாம். வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவு ஆகவே உண்ட உணவு செரிப்பதற்கு நீண்ட நேரம் பிடிக்கும் அதுவரை நீண்ட நேரம் உட்காருவதற்கு வயது மூப்பின் காரணமாக உடல் எலும்புகள் ஒத்துழைப்பு தருவதில்லை. ஆகவே இந்த சாய் நாற்காலியில் உட்கார்ந்தபடியே (முதுகு எலும்புகளுக்கு இதமாக) படுக்கை நிலையில் அமர வசதியான இருக்கையாக இருப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த அமர்வு நாற்காலியாக "ஈஸி சேர்" திகழ்கிறது. 

ஓய்வு பெற அந்த முதியவர் சாய்வு நாற்காலியில்  "ஈஸி சேர்" அமர்ந்திருக்கிறார். இவர்தான் இந்த நிகழ்வின் முதல் கதாநாயகன் அதாவது First Person Singular= " I "

வயதானவர்களுக்கு  தலையில் "முடி" என்பது அவ்வளவாக இருக்காது... பல வருடங்களாக முடி கொட்டி போயிருக்கும் அல்லது வழுக்கை விழுந்திருக்கும் . ஆக சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவருக்கு  தலையில் ஏதோ அரிப்பு ஏற்பட... தமது கையால் தலையை சொறிந்தவண்ணம் இருக்கும் நிலையில்... 

அந்தப் பெரியவரின் வீட்டு தெருவழியாக ஒரு (Post Man) தபால்காரர் செல்கிறார்.  இவர்தான் இந்தக் நிகழ்வின் 3வது நபர் அதாவது... Third Person Singular= " He/She/It" 

இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களாக நாம் அதாவது...Second Person Singular & Plural = "You" "We

தபால்காரரை பார்த்த சாய்வு நாற்காலியில் கையை தலையில் வைத்து சொரிந்துகொண்டிருக்கும் அந்தப் பெரியவர் "ஏம்ப்பா எனக்கு ஏதாவது இருக்கா?"  என்கிறார்...

கை தலையில் இருக்கும்போது தபால்காரரிடம் எனக்கு ஏதாவது இருக்கா என்று கேட்பது பார்வையாளர்களாகிய நமக்கு என்ன தோன்றும் ... பெரியவர் தலையில் ஏதாவது இருக்கா என்று தபால்காரரை கேட்பதுபோல இருக்கும்!!!..... 

பெரியவரின் கேள்விக்கு பதிலாக தபால்காரர் கூறினார் "உங்களுக்கு எதுவும் இல்லைங்க!!!"

அதோடு அந்தப் பெரியவர் விட்டிருக்கலாம்.. ஆனாலும் பெரியவர் தொடர்ந்து...."நல்லா பார்த்து சொல்லப்ப.... எனக்கு ஏதாவது இருக்கா????" என்கிறார்...

அதற்கு அந்த தபால்காரர் "பெரியவரே... நல்ல பார்த்துவிட்டேன்... கொஞ்சம் நாளாகவே உங்களுக்கு ஒன்றும் இல்லை..." என்று நிச்சயம் செய்துவிட்டு சென்றார். 

பார்வையாளர்களாகிய நமக்கு என்ன தோன்றும்... இதெல்லாம் இந்தப் பெரியவருக்கு தேவையா??? கொஞ்சம் நாட்களாக உங்களுக்கு மூளையே இல்லை... என்பதை அந்த தாபால்காரர் சான்று தந்துவிட்டு செல்வது போல நமக்கு தெரியும். 

மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்கிற நினைப்புகூட..... பல நேரங்களில், பலருக்கும், இருப்பதில்லை என்பதுதான் உண்மை...

மீண்டும் சந்திப்போம் நன்றிகளுடன் ... கோகி-ரேடியோ மார்க்கோனி..... 


Thursday, June 30, 2016

உத்தரகண்டில் மீண்டும் பெருமழை… அலக்நந்தா ஆறு உடையும் அபாயம்! கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்டில் மீண்டும் பெருமழை… அலக்நந்தா ஆறு உடையும் அபாயம்! கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு தினங்களாகப் (ஜூன்-30 மற்றும் இன்று  ஜூலை-01) பெய்து வரும் பெருமழையால் வெள்ளப் பெருக்கு அபாயத்தை எட்டியுள்ளது. கடுவாளி என்னும்  மலைவாழ் மக்கள்தான் இதனால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

அலக்கநந்தா ஆறு இமயமலைத் தொடரில் உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உயர்ந்த மலைகளின்  வழியாகப் பாயும் ஓர் அபாய ஆறு. பத்திரிநாத்திற்கு அருகவே அமைந்த சமோலி பகுதி ஆற்றில் இன்று வெள்ளப்பெருக்கு அபாயகட்டத்தை எட்டியுள்ளது சென்ற 2013-வருடத்தில் ஏற்பட்ட அபாயம் மீண்டும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே பத்ரிநாத் நகருக்கு மீண்டும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் என்று கருதப்படுகிறது. உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கேதர்நாதத்துக்கு புனிதப் பயணம் செல்லும் அனைவரையும் மிக அதிக எச்க்கறிக்கை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டுவருகிறார்கள்.    

அலக்நந்தா என்கிற பெரிய நதிக்கு, சரஸ்வதி, டவுளிகங்கா,  மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள். இவைகளோடு பாகீரதி ஆறும் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் கங்கை ஆறாக மிகப் பெரிய நதியாக பெருக்கெடுத்து ஓடும்.

உத்தரகண்டில் இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் கட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டுள்ளது.  அதில் 11 நீர் மின்சார அணைகள் கட்டி முடித்து பயன்பாட்டில் உள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் 25-கும் மேற்பட்ட அணைகள் கட்டுமானப்பணியானது முழுமையாக கட்டி முடிக்காமல் உள்ளது. இப்படி கட்டி முடிக்காமல் இருக்கும் அணைகள் கூட நதிகளில் ஏற்படும் பெருவெள்ளத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இப்படிக்கு கோகி-ரேடியோ மார்க்கோனி- உத்திரகாண்ட திட்டப் பணிமனையிலிருந்து. 

FREE JOBS EARN FROM HOME