FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, May 18, 2017

"திரிகிடஜம்" பற்றி உங்களுக்குத் தெரியுமா?

"திரிகிடஜம்" பற்றி உங்களுக்குத் தெரியுமா?


இந்தக்காலத்தில் நிறுத்தி நிதானமாக சமையல் செய்ய யாருக்கும் நேரமிருப்பதில்லை. காலையில் எழுந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக ஓர் இயந்திரம் போன்று சமையல் வேலைகளை செய்யவேண்டும். அப்படி இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது ரெடிமேட் பலநாட்களுக்கு முன்பாக செய்யப்பட்ட குளிரூட்டுப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவை சற்று சூடாக்கி சாப்பிடவேண்டியதுதான். 

உப்புமா செய்வதே ஒரு சோம்பேறித்தனமான திடீர் சமையல், இதில் தற்போது திடீர் உப்புமா என்று... சிறிது நொடிகள் அப்படியே பாலீதீன் பாக்கெட்டை மைக்கிரோ ஓவனில் வைத்து, வெளியே எடுத்து பாக்கெட்டை திறந்து சுடச் சுட சாப்பிடவேண்டியதுதான். அதோடு தண்ணீர் விட்டு கலந்துகொள்ளுமாறு திடீர் சட்டினிவேறு இலவசமாம். வெறும் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் 2-3 டேபிள் ஸ்பூன் திடீர் சாம்பார் போடி போட்டு ஒரு கலக்கு கலக்கினால் சாம்பார் தயார் அதுவும் முருங்கைக்காய், வெண்டைக்காய், வெங்காய திடீர் சாம்பார் என விதவிதமாக ரெடிமேட் திடீர் சாம்பார் போடி தற்போது எல்லா மால்களிலும்,  கடைகளிலும்  கிடைக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் மன்னராட்சி காலத்தில் உருவான இந்த சுவையான "திரிகிடஜம்" விருந்து சாப்பாடு பற்றி உங்களுக்கு தெரியுமா? 

அந்தக்காலங்களில் அதாவது மன்னராட்சிக் காலங்களில் நாட்டை ஆளும் மன்னர்கள் தனது நாட்டிலிருந்து வெகு தொலைவுக்கு காடு மலை என்று சுற்றிவிட்டு திரும்புவார்கள். அப்படி ஒருநாள் அந்த மன்னர் தனது பரிவாரங்களுடன் ஆர்வமிகுதியால் வெகுதூரம் காடு மலைகளை சுற்றித் திரிந்தால் தனது அரண்மனைட்க்குத் திரும்ப நேரமாகிவிட்டது. ஆகவே வழியில் எங்காவது ஒரு சத்திரத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து அருகே ஏதாவது தாங்கும் விடுதி உள்ளதா என்று வழியெங்கும் தேடியபடி வந்தனர் இப்படியே தேடித் தேடி இரவு 12 மணி ஆகிவிட்டது அப்போது வெகுதொலைவில் ஒரு கிராமத்து கோவில் சத்திரம் ஒன்று தெரிய அனைவரும் அந்த சத்திரத்துக்கு வந்து சேருகிறார்கள்.

மன்னர் மற்றும் அவரது ஆட்களை பார்த்த அந்த சத்திரத்தை பொறுப்பேற்றுப் பராமரிப்பவர் ஆடிப்போகிறார். மன்னருக்கு கடுமையான பசி, இன்றிரவு இங்கேயே தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்துதாருங்கள் என்று கூறிவிட்டு,  தங்களது கடுமையான பசிக்கு உணவிடுமாறும் கட்டளையிடுகிறார். 

சத்திர பொறுப்பாளருக்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது, அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தால் அங்கு அடுப்பு நெருப்பும் அணைக்கப்பட்டு சமையல் பாத்திரங்கள் எல்லாம் சாம்பல் புளி போட்டு தேய்ப்பதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் சத்திர பொறுப்பாளர் சமையல்காரர்களை அழைத்து மன்னர் வந்திருப்பதை கூறி கட்டளை பிறப்பித்தார்..... அனைத்துப் பாத்திரங்களிலும் மிச்சம் மீதி (தேய்ப்பதற்கு போட்டிருந்த சாம்பல் புளி போன்றவற்றையும் சேர்த்து) பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவைகளையெல்லாம் வழித்து ஒன்றாக சேர்த்து ஒரு கடாய் பாத்திரத்தில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு கடுகு தக்காளி வெங்காயம் என சில காய்களையும் போட்டு தாளித்து, அத்துடன் உப்பு காரம் போன்றவைகளையும் சேர்த்து ஒருவழியாக ஒரு கிச்சடி போன்ற உணவை தயார்செய்து மன்னருக்கும் அவருடன் வந்த மன்னர் படை ஆட்களுக்கும் பரிமாறினார். 

மன்னருக்கிருந்த கடுமையான பசியால் அங்கு பரிமாறப்பட்ட உணவு தேவாமிர்தம் போல மிகவும் சுவையாக  இருந்ததால்,  "இப்படி ஒரு சுவையான "ஜம்மென்று" பிரமாதமான ஒரு உணவை நான் இதுவரை உண்டதேயில்லை"  இந்த சமையல் பண்டத்தின் பெயர் என்ன என்று கேட்டுவிட... அவ்வளவுதான்  திரும்பவும் சத்திர பொறுப்பாளர் சற்று அதிர்ந்து ஆடிப்போகிறார்.

மன்னரிடம் நடந்தவைகளை சொன்னால் நாம் உயிர் பிழைப்பது கடினம் எனவே, மன்னரை பார்த்ததால் திடீர் திக் என்று, மன்னர் வேறு அந்த உணவை "ஜம்மென்று" பிரமாதமாக உள்ளது என்று சொன்னதால், இந்த உணவின் பெயர் "திரிக்கிடஜம்" என்று அந்த இக்கட்டிலிருந்து சமாளித்து அந்த உணவிற்கு ஒரு புதுப் பெயரை சூட்டினார்.     

அந்தப் புதுவித உணவின் "திரிகிடஜம்" என்ற பெயரைக்கேட்டதும் மன்னர் வயறு நிறைய உண்டு, மகிழ்ந்து, அந்த சத்திரத்தின் பொறுப்பாளருக்கு தாம் அணிந்திருந்த தங்க, வைர, முத்து மாலைகளை பரிசாக தந்து, நாளைமுதல் நீங்களும் உங்களது சமையல் குழுவினர்களும் எனது அரண்மனையில் சிறப்பு சமையல் செய்பவர்களாக தினமும் இந்த "திரிக்கிடஜம்" உணவை சமைத்து பரிமாறவேண்டும் என கட்டளையிட்டார். 

இரவு 2மணி, அந்த சாத்திரத்தின் சமையல் அறையில் சத்திர பொறுப்பாளரோடு சேர்ந்து அனைத்து சமையல் காரர்களும் இந்த விவரங்களைக் கேட்டு வயிறுகுலுங்க சிரித்துக்கொண்டிருந்தார்கள். இனிமேல் நாம் கூட "திரிகிடஜம்" சாப்பிடவேண்டியிருக்கும் ....என்று கூறி அனைவரது சிரிப்பலைகள் தொடர்ந்தது .  அங்கு ஒலித்துக்கொண்டிருந்தது.....   


ஆகவே மிகவும் கவனமாக செய்யும் சமையல் அத்தனை சுவையாக இருப்பதில்லை, எதோ காமா சோமா என  எதையாவது அள்ளித்தெளித்து செய்யும் சமையல்தான் ஜம்மென்று பிரமாதமாக உள்ளது.

இப்போதெல்லாம் ஆண்கள் செய்யும் சமையல்தான் மிகவும் ஜம்மென்று, பிரமாதமாக, சுவையாக இருக்கிறது என்று பெண்கள் கூறுகிறார்கள். ஆகவே வெகு சீக்கிரத்தில் ஆண்கள் இல்லத்தரசர்களாகவும் பெண்கள் அலுவலகம் சென்று சம்பாத்தியம் செய்வது பெண்களின் லட்சணம் என்று கூறும் காலம் வரப்போகிறது.  

இதைப்போலவே:-
@ இரயில் நிலையத்தில் "மஞ்சக்குருவி" கதை 
@ சென்னை கிண்டியில் "கமான் பாட்டி" கதை 
@ மடி ஆச்சாரத்தோடு மாமிகள் போட்ட "ஆவக்காய் ஊறுகாய்" கதை
@ முப்பத்தி ஒன்றாம்  நூற்றாண்டில் "சென்னைத் தீவு" கதை 
 @  "மூக்கு பிழிந்த -சீமந்தப் புத்திரி" கதை
இப்படி பாட்டி சொன்ன பல சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த, கதைகள் பலவற்றை ஒவ்வொன்றாக தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.   

"சீடன்" திரைப்படத்தில் உள்ள "சரவணா சமையல்" என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது,  பாடலின் இசை: தினா,  பாடகர்: ஹரிஹரன்.

மீண்டும் எனது அடுத்தப்பதிவில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்....  

நன்றி வணக்கம் கோகி -ரேடியோ மார்கோனி. 





No comments:

FREE JOBS EARN FROM HOME