FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, February 11, 2017

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!

சாபம் நீக்கியோன் சன்னிதிக்கு வாராய்!

"வெறும் சேவை செய்தாலே போதும்- சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும்" என்பது உங்களுக்குத் தெரியுமா? பல வரலாற்று உண்மைச் சம்பவங்களோடு அவற்றைத் தெரிந்துகொள்ள, தொடர்ந்து இந்தப்பதிவை படித்துப்பாருங்கள்.......


மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில தோஷ்ங்கள் காணப்படுகின்றன. முற்ப்பிறவியில் செய்த தவறுகளால், பாவச்செயல்களினால் ஏற்பட்ட வினைதான் இப்படி தோஷங்களாக அமைந்துவிடுகிறது. அவற்றில் முதன்மையான தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோஷங்களாகும். அதாவது நிழலாக நமது ஆத்மாக்களின் பிறவிகளோடு தொடரும் தோஷங்கள். அப்படி நிழல் கிரகமான ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ பரிகாரமாக பலவற்றையும் செய்வதைவிட மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது... அது எப்படி என்பதை சில உண்மைச்சம்பவங்கள் மற்றும் சில வரலாற்று நிகழ்விலிருந்து விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்....

கர்ம வினைகளினால் ஏற்படும், பிதூர்தோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷம், புத்திர தோஷம் போன்ற முக்கிய தோஷங்களுக்கு நிழல் கிரகங்களான ராகு,கேதுக்களே காரணமாகின்றனர். ஏனென்றால் அவை நிழலாக நம்மைவிட்டு விலகாமல் நாம் செய்த கர்ம வினைகளினால் நம்மை துரத்துகின்றன. அப்படிப்பட்ட இருட்டு-நிழல் நம்மீது படர்வதினால், நமது உடலின் உருவம் மற்றவர்களை கவர்ந்திழுக்காமல் மங்களாகி விடுவதோடு, நமது எண்ணங்களும் இருட்டடிக்கப்படுகிறது. நமக்கு முன்னாள் எதோ ஒரு திரை நமது கண்களை மறைக்கும்போது அந்தத் திரையை விலக்காமல் நம்மால் எதையும் செய்யமுடிவதில்லை.  

ஜோதிடர்களின் கூற்றுப்படி, சர்ப தோஷம் என்பது என்னவென்றால் ஒருவரது ஜனன ஜாதக லக்னத்தில் ராகு, மற்றும் 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. அல்லது 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், மற்றும் லக்கினத்திலிருந்து 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் ராகுவோ கேதுவோ இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம்.

சர்பதோஷத்தினால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷம் உள்ள ஒரு ஜாதகரோடு, மற்றொரு சர்ப தோஷம் கொண்ட ஜாதகரையும் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம். 

மருத்துவத்துறை சிறப்பாக நடக்க மருத்துவ கிரகமான கேதுவின் அருள் வேண்டும். அவரது அருள்கடாட்சம் இல்லாமல் மருத்துவத்துறையில் முன்னேற முடியாது. மேலும் திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள். ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், அடிக்கடி பாம்பை பார்க்கநேரிட்டாலும், ராகு /கேது தோஷ பரிகாரம் செய்வது நல்லது. 
பரிகாரம்; 
@  திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.   

(திருக்காளஹஸ்தி சென்றால் பாதாள விநாயகரையும், திருகாளத்தீஸ்வரரை தரிசிக்கும்போது   சிவலிங்கத்தோடு  இருக்கும் நாகதேவரையும், சிலந்தி மற்றும் யானை மற்றும் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் தங்கப் பல்லி ஆகையவைகளை அதற்குரிய  இத் தளத்தின் வரலாற்று முறைப்படி தரிசிக்கவேண்டும் என்பதை கவனத்தில் வையுங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில், உங்களைப்பிடித்த தோஷங்களை போக்கும் என்பதை நினைவில் வையுங்கள். எப்படிப்பட்ட புராதான திருக்கோவில்களாக இருந்தாலும், அந்தக் கோவிலின் / திருத்தலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்த திருத்தலத்தின் வரையறுக்கப்பட்ட முறைப்படி தரிசனம் செய்தால் மட்டுமே முழுப்பலனையும் பெறமுடியும். ஆகவே கோவில் அலுவலகத்தை தொடர்புகொண்டு அல்லது அந்த திருக்கோவில் அர்ச்சகரை உரிய தட்சிணைகளை தந்து, முழுவிவரங்களையும் தெரிந்துகொண்டு, உரிய முறையில் தரிசனம் செய்யவேண்டும். அப்போதுதான் சரியான தரிசன பலன் நமக்கு கிடைக்கும்)

@  ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம்.ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.
@ இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன், பாட்டி-தகப்பன் வழி பட்டன், பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும். காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.

@ நிழல் கிரகமான ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ பரிகாரமாக பலவற்றையும் செய்வதைவிட மிகச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது......அதாவது " ஆலயம் செல்லும் பக்தராக குறைந்தது ஒருநாளாவது   "புட்டபர்த்தியில்" கால்கள் அந்த புண்ணிய பூமியில் படுமாறு அங்கு தங்கி சேவை செய்யவேண்டும். (சபிக்கப்பட்ட இடம் எப்படி புண்ணியபூமியானது என்பதற்கு ஒரு புராண சம்பவம் ஒன்று உண்டு) அப்படி சேவை செய்வதால் ராகு கேதுவின் தோஷங்கள் உங்களைவிட்டு விலகுவதை உங்களால் அனுபவப்பூர்வமாக உணரமுடியும்.  அது எப்படி என்பதை ஒரு வரலாற்று நிகழ்விலிருந்து விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்....

(இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் சித்திராவதி நதிக்கரையருகே அமைந்த ஒரு நகரம் "புட்டபர்த்தி" என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. புட்டப்பருத்தியின் அசல் பெயர் "கொல்லபள்ளி"  என இருந்தது)

முன்னமோர் நாளினில் மூண்டசா பத்தினால் 
துன்னிய புற்று துயர்செய்த பர்த்தியைப்
பன்னகம் பூண்டவன் வாழ்கயி லாயமோ
மென்னகை நாரணன் மேவுவை குந்தமோ
என்னவே ஆக்கிய இன்முகன் சாயியின்
சன்னிதி தன்னைச் சடுதியில் சேர்ந்திட
உன்னை யழைத்தோம் உறங்குதல் ஆகுமோ
இன்னகை வாராய்! இசைந்தேலோ ரெம்பாவாய்!    (பாடல்-4)

பொருள்:-
பண்டைநாள் ஒன்றில் உண்டான சாபத்தால் புற்றுக்கள் மண்டிக் கிடந்து புட்டபர்த்தி மிகவும் துன்பமடைந்தது. அப்படிப்பட்ட இடத்தை, இது நாகங்களை அணிந்த சிவன் வாழும் கைலாசமோ, இனிய நகை பூண்ட நாராயணன் வசிக்கும் வைகுண்டமோ என்னும்படி ஆக்கிவிட்டான் சாயி! அவனுடைய சன்னிதிக்கு விரைவாகப் போய் அடையலாம் வா என்று நாங்கள் உன்னை அழைத்தோம். இனிய நகை பூத்தவளே! இசைந்து எங்களோடு வருவாயாக. (அருஞ்சொற்பொருள்: பன்னகம் - பாம்பு.)

இன்று புட்டபர்த்தி என்று அறியப்படுமிடம் பண்டைக்காலத்தில் கொல்லபள்ளி (பசுக்கூட்டம் நிறைந்த இடம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இங்கு முழுவதும் பசுக்களும் இடையர்களும் நிறைந்திருந்தனர்.

ஒருநாள் அந்தக் கிராமத்தின் இடையன் ஒருவன், காட்டில் பசுக்களை மேய்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அதில் ஒரே ஒரு பசுவின் மடியில் பால் இல்லை என்பதை கவனித்து ஆச்சரியம் அடைந்தான். இது தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று எப்படிப் பால் திருடுபோகிறது என்றறியத் தீர்மானித்தான். இதையறியாத பசு வழக்கம்போல ஒரு பாம்புப் புற்றின் அருகில் சென்றது. அதிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, பசுவின் பின்னங்கால்களைச் சுற்றிக்கொண்டு அதன் மடியிலிருந்த பாலைக் குடித்தது. பசுவுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.

இடையனுக்குக் கோபம் கண்மண் தெரியாமல் பொத்துக்கொண்டு வந்தது. அந்தப் பாம்பு தெய்வீகமானதாக இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு பெரிய கல் ஒன்றை எடுத்துப் பாம்பின்மேல் எறிந்தான். ரத்தம் சிதறிக் கல்லைக் கறையாக்கியது. பாம்பும் இறந்துபோனது.

ஒரு பாம்பை அடித்தால் புற்றீசல் போல பல பாம்புகள் வெளிவரும் என்பது கூற்று. எனவே இந்தச் சம்பவத்துக்குப் பின் கொல்லபள்ளியில் இடையர் குடும்பங்களும், பசுக்களும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. பார்க்குமிடமெல்லாம் பாம்புப் புற்றுகள் வளரத் தொடங்கின. அந்த இடையனால் கொல்லப்பட்ட பாம்பின் சாபமே கொல்லபள்ளி கிராமம் அழியக் காரணம் என்று மக்கள் நம்பினர். அந்த கிராமத்தின் பெயர் ‘புட்டவர்த்தினி’ (புற்றுக்கள் செழித்து வளரும் இடம்) என்றாயிற்று.

பாம்பின் ரத்தம் படித்த அந்தக் கல்லை எடுத்துச் சென்று அதற்கு ‘கோபாலஸ்வாமி’ என்று பெயரிட்டு அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். (கோபாலன் என்றால் பசுக்களைக் காப்பவன், அதாவது இடையன், என்றுதானே பொருள்). தமது குலத்தைச் சேர்ந்தவன் செய்த தவறை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தனர். மெல்லப் பெயர் மாறி ‘புட்டபர்த்தி’ என்று ஆனது.

அதே கிராமத்தில் ரத்னாகர வம்சத்தில் வந்த கொண்டமராஜு கிருஷ்ணனின் தேவியான சத்யபாமாவுக்கு ஒரு கோவில் ஏற்படுத்தினார். மிகுந்த பக்திமானான கொண்டமராஜுவின் பேரனாக அவதரித்த அவதாரப் புருஷனால் புட்டபர்த்தியின் சாபம் முழுவதுமாக நீங்கப்பெற்று, இன்று உலகம் போற்றும் தெய்வத் திருத்தலமாக விளங்குகிறது.

ஒருமுறை ஸ்ரீ சத்ய சாய் பகவான் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். பாதையில் ஒரு பாம்பு குறுக்கே ஓடியது. ஓட்டுனர் வண்டியை பிரேக் போடாமல் பாம்பின் மேல் வண்டியை ஏற்றிவிட்டான். புட்டப்பர்த்தி வந்ததும் பகவான் வாகனத்திலிருந்து இறங்கினார். நேரே தனது அறைக்குச் சென்றார். ஓட்டுனரை கூப்பிட்டு அனுப்பினார். ஓட்டுனர் வந்தவுடன் தனது மேலங்கியை கழற்றி ஓட்டுனருக்குக் காட்டினார். முதுகிலே டயரின் தடம் பதிந்திருந்தது. பகவான் "பார் அந்தப் பாம்பின் மேல் நீ காரை ஏற்றவில்லை என் முதுகின் மேல் ஏற்றிவிட்டாய்' என்றார். ஓட்டுனருக்கு வியர்த்தது. கையும் காலும் ஓடவில்லை. "இனிமேல் இம்மாதிரியாக நடந்து கொள்ளாதே' என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இன்னொரு முறை சித்திராவதி நதிக்கு அக்கரையிலிருந்து ஒரு குடும்பம் அவதார புருஷரான ஸ்ரீ சாயிபாபாவை பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் இரண்டு நாட்கள் புட்டபர்த்தியில் தங்கியிருந்து. பகவானிடம் விடை பெற்று, தங்கள் ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார்கள் அப்போது. பகவான் சத்யசாயிபாபா அவர்களை அழைத்து அவர்களிடம்  "நீங்கள் மாட்டு வண்டியில் தானே வந்தீர்கள்' என்று கேட்டார். ஆம் என்ற பதில் வருவதற்கு முன்பே சத்யா சாயி பகவான் தொடர்ந்து பேசினார்  "நீங்கள் மொத்தம நான்கு பெரியவர்களும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றீர்கள்'. சித்திராவதி நதிப்படுக்கை மணலாக இருக்கிறது. ஆற்றைக்  கடந்த பிறகு நீங்கள் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள். அதற்கு முன் வண்டியில் ஏறினால் மாடு மிகவும் கஷ்டப்படும். மாட்டைக் கஷ்டப்படுத்தாதீர்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். எங்கோ இருக்கின்ற மாட்டுக்காக அவதார புருஷரின் இதயம் எவ்வளவு கனிகிறது என்று பாருங்கள் என்று ஒரு பக்தர் கூறியதைக்  கேட்ட ஸ்ரீ சத்யா சாயி பகவான், அவரை அழைத்து 'இறைவனிடம் அடிபணியும் அனைத்து ஜீவராசிகளின் மனதை என்னால் புரிந்துகொள்ளமுடியும். வண்டியை இழுத்து வந்து மாடுகளின் கஷ்டத்தையும், வந்திருந்த அந்தக் குடும்பத்தினரின் குடும்ப தோஷ கஷ்டங்களும் தீர, அவர்களின் காலடி இந்தப் புட்டபர்த்தியில் படவேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட சாப விமோச்சனமாக இருந்ததால் அப்படி கூறி அனுப்பினேன்' என்கிறார்.   

நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்,  சில சாஸ்திர சம்பிரதாயங்களால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றால் அவற்றின்மீது நம்பிக்கை வைப்பதால் தவறு ஏதும் இல்லையே? ஆகவே சாமி சொல்லோ அல்லது ஆசாமி சொல்லோ நமக்குத் தேவை, நாம் நமது கெட்ட கர்ம வினைகளிலிருந்து விடுதலை பெற்று சிறப்படையவேண்டும், எனவே தோஷ பரிகாரம் என்பதை செய்வதில் தவறு என்று ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நம்பிக்கையோடு  முயற்சி செய்து பாருங்கள், முடியாது என்று ஏதும் இல்லை. ஆகவே நம்பிக்கையோடு செய்யும் எல்லா செயலும் நமக்கு நல்லவைகளை தரும் என்று நம்புவோம்..... 
  
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

No comments:

FREE JOBS EARN FROM HOME